Thursday, October 19, 2023

குழந்தை வளர்ப்பு ....!

 

குழந்தை வளர்ப்பு – சில பயன் உள்ள தகவல்கள்…!

ஏக இறைவன் மனிதர்களுக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வரங்களில் ஒன்று, குழந்தை பாக்கியமாகும். தற்போதைய நவீன உலகத்தில் இயற்கைக்கு மாறுப்பட்ட வாழ்க்கை நடைமுறைகள் காரணமாக சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது இல்லை. இதனால், அவர்கள் அடையும் மன வேதனையை சொல்லவே முடியாது. இதன் காரணமாக சிலர் இளம் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாதவர்களிடம் விற்பனை செய்யும் போக்கு நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. அதேபோன்று, செயற்கை முறை கருத்தரிப்பு மையங்களும் வீதிக்கு வீதி முளைத்துள்ளன. அதேநேரத்தில் குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் எதிர்காலம் மிக நல்ல முறையில் அமையும் என மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சத்தான திட உணவு:

பிறந்த குழந்தை 5 முதல் 6 மாதங்கள் வரை தாயின் பால் குடிக்கும். 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த திட உணவுகள் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களுக்கு சத்தான உணவை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட திட உணவுகளை வழங்கலாம் என்பது குறித்து சில தகவல்களை இப்போது காணலாம்.

பருப்பு கிச்சடி:

பருப்பு சிக்சிடி உணவு குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல பலன் அளிக்கும். இதை செய்ய, பருப்பில் அரிசி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் நெய் சேர்த்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.  நிலக்கடலை பருப்புடன் தயாரிக்கப்படும் கிச்சடியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று வெண்டைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் கிச்சடி மிகவும் சத்தானதாக இருக்கும். அது குழந்தைகளுக்கு நல்ல பயன் தரும்.  

ஆப்பிள் ப்யூரி:


ஒரு சத்தான ஆப்பிள் பழத்தை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் குழந்தைகளுக்கு சிறிது ஆப்பிள் ப்யூரியை ஊட்டலாம். அதை செய்ய ஆப்பிளின் தோலை நீக்கி விதைகளை நீக்கி வேகவைத்து அரைத்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.

ப்ரோக்கோலி ப்யூரி:

ப்ரோக்கோலி ஒரு சத்தான காய்கறி. இது குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை செய்ய ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.. குக்கரிலும் இதை செய்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

பருப்பு நீர்:

பருப்பில் மனித ஆரோக்கியத்திற்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதைத் தயாரிக்க, ஏதேனும் பருப்பை தண்ணீரில் நன்கு வேகவைத்து, குழந்தைக்கு அந்த தண்ணீர் கொடுக்கலாம்.  குழந்தைக்கு தினமும் பருப்பு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுதத வேண்டும். அதேநேரத்தில், அதில் மிளகாய் இல்லாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் ப்யூரி:

இது சுவையானது மற்றும் சத்தானது. ஓட்மீலை அரைத்து, பிறகு பாலில் சமைக்கவும். அதில் நீங்கள் வாழைப்பழம் அல்லது வேறு ஏதேனும் பழங்களை சேர்க்கலாம். தினமும் இந்த உணவை அளித்தால், குழந்தையின் செரிமானம் மேம்படும். குழந்தைகளுக்கு வயிறு கோளாறு பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

திட உணவுகள் அவசியம்:


நாம் ஆரம்பத்தில் சொன்னது போல, ஆறு மாத குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை தாய்மார்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் வளர்ச்சி மிக நல்ல முறையில் இருக்கும். அத்துடன் குழந்தை மிக ஆரோக்கியமாகவும் இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகளுக்கு திட உணவுடன் அன்பு, பாசம், நேசம் என்ற உணவுகளை வழங்குவதை தாய்மார்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் குழந்தை ஆரோக்கியமாக மட்டுமல்லாமல், நல்ல குழந்தையாக வளர்ந்து மனித சமுதாயத்தில் ஓர் சிறந்த மனிதனாக உருவெடுத்து, அனைத்துத் தரப்பு மக்களையும் நேசிக்கும் பண்புள்ள மனிதநேயராக இருக்கும்.  இதை நாம் எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு, குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

-          எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: