Wednesday, November 26, 2025

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணல்....!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட விருப்பம்.....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணலில் தகவல்....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மத்தியில், அரசியல் கட்சிகள் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும்., எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணியில்  உள்ள கட்சிகளும் தொகுதி நிலவரம், போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய இஸ்லாமிய இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும், 2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை அன்று திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், 52 மாவட்டங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம். மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சென்னை மண்ணடியில் உள்ள காயிதே மில்லத் மன்ஜிலில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களை சந்தித்து, இனிய திசைகள் மாத இதழுக்காக சிறப்பு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலின் முழு விவரம் இதோ:

அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை :

திருச்சியில் நவம்பர் மாதம் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மீண்டும் இணைந்து செயல்பட இயக்கம் முடிவு செய்துள்ளது. திமுக தலைமையில் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, தற்போதைய நல்லாட்சி தொடரும். அதற்கான தேர்தல் பணிகளை  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இயக்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேண்டிய தொகுதிகள், அதன் எண்ணிக்கை ஆகியவை குறித்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தங்களுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் கூட்டத்தின் முன்பு வைத்தனர். கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வரும் தேர்தலில் அந்த நிலை ஏற்படாது. 2026 தேர்தலில் 5 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்கு உள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 16 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. வரும் தேர்தலிலும் அதை வலியுறுத்துவோம். பீகாரின் நிலைமை வேறு. தமிழ்நாட்டின் நிலைமை வேறு. தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும், மு.க.ஸ்டாலின் ஆட்சி அனைத்துச் சமுதாய மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியாக இருக்கும்.

மஹல்லா ஜமாத்துக்கள் மாநாடு :

இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கும்பபோணம் சுவாமிமலை அருகே மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்கிறார். திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கியக் கோரிக்கைகளாக 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள முஸ்லிம்‘ சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும். பட்டா இல்லாத பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க, எஸ்.ஐ.ஆர். (தனிநபர் தகவல் பதிவு) தொடர்பான நடைமுறைகளை ஒத்திவைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும். இது தொடர்பாக இ.யூ.முஸ்லிம் லீக்  சார்பிலும் உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் வெளிநாடு வாழ் தமிழர்களையும் இணைக்க வேண்டும். தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஐந்து முக்கிய தொகுதிகள் :

திருச்சி அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, மஹல்லா ஜமாஅத் ஒருங்கணைப்பு மாநாடு மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் இயக்கம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. திருச்சியில் செயற்குழு நிர்வாகிகள் வழங்கிய ஆலோசனையின் படி, வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணி தலைமையில் இருந்து வாங்கும் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பது திருச்சியில் நடைபெற்ற அவசரச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். 

கடந்த தேர்தலில் நாங்கள் மூன்று தொகுதிகளை வாங்கி, போட்டியிட்டு தோல்வி அடைந்தோம். அத்தகைய சூழ்நிலையில், திரும்பவும் மூன்று தொகுதியா, ஐந்து தொகுதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளின் எல்லோரின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த கருத்தை தான் திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.

இராமநாதபுரத்தில் திருவாடானை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் ஆகிய தொகுதிகள் நல்ல தொகுதிகள் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபான்று,  சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதி, திருச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி, தஞ்சாவூரில் பாபநாசம் தொகுதி, நாகை மாவட்டடத்தில் நாகப்பட்டினம் தொகுதி, கடலூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி, கரூரில் அரவக்குறிச்சி தொகுதி என இப்படி, ஒரு பத்து இருபது தொகுதிகளின் பெயர்களை நிர்வாகிகள் பரிந்துரை செய்து கருத்துகளை தெரிவித்தார். 

இந்த பத்து, இருபது தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதியாவது வாங்க வேண்டும் என்பது செயற்குழுவில் நிர்வாகிகளின் விருப்பமாக இருந்தது. ஆனால் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற செயற்குழு நிர்வாகிகளின் கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகள் ஆகிய அனைத்தையும் கட்சி தலைமை தீவிரமாக ஆய்வு செய்யும். அதன்பிறகே, எந்தவெரு முடிவும் எடுக்கப்படும். 

தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் :

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். தற்போதைய திராவிட மாடல் ஆட்சி, இந்திய நாட்டிற்கு மட்டுல்லாமல், உலகத்திற்கே வழிகாட்டும் ஆட்சியாக இருந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களுக்கு வழிக்காட்டும் மாநிலமாக மாற்றியுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும், திமுக ஆட்சிக்கு நன்மதிப்பு வழங்கி வருகிறார்கள். மக்களின் எண்ணங்கள் அனைத்தும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதாகவே இருந்து வருகிறது. சிறுபான்மையின மக்கள் மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் திமுகவின் ஆட்சியை பாராட்டு வருகிறார்கள். எனவே நூறு சதவீதம் மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், திமுக ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். திமுக ஆட்சிக்கு துணையாக இருப்பார்கள். ஒத்துழைப்பு வழங்குவார்கள். அந்த நம்பிக்கை  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு இருந்து வருகிறது. 

இவ்வாறு சிறப்பு நேர்காணலில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தமது எண்ணங்களை மிகத் தெளிவாக தெரிவித்தார். அவரது விருப்பப்படி, தமிழ்நாட்டில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, திராவிட மாடல் நல்லாட்சி தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமான வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைய வாழ்த்திவிட்டு விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : மூத்த ஊடகவிலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===========================================

No comments: