Tuesday, May 14, 2024

ஒரு கட்டுக்கதை....!

 

முஸ்லிம்களின் மக்கள் தொகை குறித்த ஒரு கட்டுக்கதை

இந்திய முஸ்லிம் மக்கள் தொகை குறித்து அண்மையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டில் கடந்த 1950ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்துக்களின் எண்ணிக்கை 7 புள்ளி எட்டு இரண்டு (7.82) சதவீத சரிவை சந்தித்து இருப்பதாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43 புள்ளி ஒன்று ஐந்து சதவீதமும், (43.15) கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 5 புள்ளி மூன்று எட்டு சதவீதம் (5.38) உயர்வை கண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுக்கதை தொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றை கடந்த 10.05.2024 அன்று மணிச்சுடர் நாளிதழில் வெளியிடப்பட்டது. மேலும்,  ஆய்வறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தவறனாவை மற்றும் ஆதாரமற்றவை என இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை விளக்கம் அளித்து இருந்ததையும் அந்த கட்டுரையில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்,.

இத்தகையை சூழ்நிலையில், “ஒரு நல்ல நோக்கத்துடன் கூடிய ஆய்வு மற்றும் ஒரு மக்கள்தொகை கட்டுக்கதை” (A well-intentioned study and a demographic myth) என்ற தலைப்பில் ‘தி இந்து ஆங்கில நாளிதழில்’ கடந்த 13.05.2024 அன்று சட்ட வல்லுநர் ஃபைஜன் முஸ்தபா அவர்கள் ஒரு அருமையான கட்டுரையை எழுதி, முஸ்லிம்களின் மக்கள் தொகை குறித்து பரப்பப்படும் பொய் கட்டுக்கதைகள் குறித்து விளக்கங்களை அளித்துள்ளார். அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதில் இருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.

அறிக்கையின் சுருக்கமான முடிவு:

இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையினருக்கு நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC) அறிக்கையின் சுருக்கமான முடிவாகும், இது முஸ்லீம் மக்கள்தொகை அதிகரிப்பு பற்றிய விவாதத்தையும் புதுப்பித்துள்ளது. இந்தியாவின் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள் எவ்வாறு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், எந்தவிதமான பாகுபாடு அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அறிக்கை நன்கு நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரம், கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால தரவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை பல கேள்விகளை எழுப்புகிறது.  பௌத்தர்களின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 1,520 சதவீத பங்களிப்பை இந்த அறிக்கையில் உயர்த்திக் காட்டவில்லை, மேலும், நாட்டில் ஒரு முஸ்லிம் பிறந்தபோது,  ஐந்து இந்துக்கள் இந்தக் காலகட்டத்தில் பிறந்துள்ளனர்.  இந்துக்களின் மக்கள்தொகை (1950இல் 320 மில்லியன்) மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் முஸ்லீம் பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) இந்து பெண்களின் கருவுறுதல் (TFR) விகிதத்தை விட  குறைந்துள்ளது,  இவை அனைத்தும் சர்ச்சைக்குரியதாக ஆக்கியுள்ளன.

பெரும்பான்மை அந்தஸ்தை இழக்கவில்லை:

நாட்டில் சிறுபான்மையின மக்களின் தொகை அதிகரித்து வருவதால், இந்துக்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என இந்துத்துவ அமைப்பின் பழைய கட்டுக்கதைக்கு இந்த அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது. இந்தியாவில் சுமார் 800 ஆண்டுகள் முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தபோதும், இந்துக்கள் தங்களுடைய பெரும்பான்மை என்ற அந்தஸ்தை ஒருபோதும் இழக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு உன்னா நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினர், இந்துக்கள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் இந்துக்களின் தொகை 79 புள்ளி எட்டு பூஜ்யம் (79.80) சதவீதம் இருந்து வரும் நிலையில், முஸ்லிம்களின் தொகை 14 புள்ளி இரண்டு மூன்று (14.23) சதவீதமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், இந்துக்கள் எப்படி பெரும்பான்மையினர் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும்? மக்கள் தொகை ஆய்வாளர்கள் இத்தகைய ஆபத்தை ஒருபோதும் நினைத்து கூட பார்க்கவில்லை.

வாக்காளர்களான மக்களை குழப்புவதில் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்களில் சிலர், மக்கள் தொகை ஜிஹாத் என்ற முழக்கங்களை எழுப்பி, ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் நாம் அவர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்பு, ‘இறக்கும் இனம்” (A Dying Race) என்ற நூலை எழுதிய உபேந்திரா நாத் முகர்ஜி, நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாகவும், விரைவில் நியூசிலாந்து நாட்டில் பழங்குடியின மக்கள் காணாமல் போனது போன்று, இந்தியாவிலும் இந்துக்கள் காணாமல் போவார்கள் என எழுதியுள்ளார். ஆனால் முகர்ஜி எழுதியது போல், இந்துக்களின் எண்ணிக்கை நாட்டில் குறையவில்லை.  

கருவுறுதல் விவகாரம்:

கருவுறுதல் (TFR) விகிதத்தை வைத்து மட்டும், ஒரு இன மக்களின் அந்தந்ததை வரையறுக்க முடியாது. அதிக கருவுறுதல் விகிதம் ஏற்பட, ஏழ்மை, பின்தங்கிய பொருளாதார நிலைமை, கல்வியறிவு இல்லாமை உள்ளிட்ட காரணங்கள் இருந்து வருகின்றன. இதனை தடுக்க, கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகளை உயர்த்த நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்று பேசிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் நன்கு வாழ்ந்து வருவதற்கு அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என குறிப்பிட்டார்.

உலகில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையில் அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது.

கடந்த 1947ஆம் ஆண்டிற்கு பிறகு முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறதா என்ற கேள்விக்கு பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் வரும் 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இந்து மக்களின் தொகை மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

தெற்காசிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. நிதியமைச்சர் குறிப்பிட்டதைப் போல, பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் நன்கு இருந்து வருகிறார்கள் என்பதும் உண்மையாகும்.

ஆனால், மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை வைத்துக் கொண்டு, ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்த்தின் அந்தஸ்தை நாம் அளவிட முடியாது. கருவுறுதல் (TFR) விகிதம் அதிகரிக்க, கல்வியறிவு இல்லாமை, பின்தங்கிய சமூக, பொருளாதார நிலைமை ஆகியவை முக்கிய காரணங்களாக  இருந்து வருகின்றன. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் கல்வி பெறுவது மிகவும் குறைந்து வருகிறது. இதேபோன்று கருவுறுதல் விகிதமும் குறைந்து கொண்டே வருகிறது.

உண்மை நிலை என்ன?

கடந்த 2001 மற்றும் 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 36 புள்ளி பூஜ்யம் இரண்டு (36.02) சதவீதத்தில் இருந்து 24 புள்ளி பூஜ்யம் நான்கு (24.04) சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்த இருபது ஆண்டுகளில் இந்துக்களின் மக்கள் தொகை 20 புள்ளி மூன்று ஐந்து சதவீதத்தில் இருந்து 16 புள்ளி ஏழு ஆறு சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தாலும், கருவுறுதல் விகிதம் இரண்டு சமூகங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நூற்றாண்டின் முடிவில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 புள்ளி 8 (18.8) சதவீதம் அளவுக்கு இருக்கும் என்றும் இந்துக்களின் மக்கள் தொகை 74 புள்ளி 7 (74.7) சதவீதம் அளவுக்கு இருக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை கணிப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகாரில், இந்துக்களின் கருவுறுதல் விகிதம், இரண்டு புள்ளி எட்டு எட்டாக (2.88) இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் இரண்டு புள்ளி இரண்டு ஒன்பதாக (2.29) இருந்து வருகிறது. இது தமிழ்நாடு கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதத்தை விட அதிகமாகும். இதேபோன்று, அசாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற பிரச்சாரமும் உண்மை இல்லை என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மசோதாகளை நிறைவேற்றியுள்ளன. அவற்றின் மூலம் மட்டுமே மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும். கடந்த 2000ஆம் ஆண்டு முந்தைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு, தேசிய மக்கள் தொகை கொள்கை அறிமுகம் செய்து, பெண் கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தியது. 

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பிரச்சினையில் இந்தியா சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு நரேந்திர மோடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது விளக்கங்களை அளித்துள்ளது.

நாட்டில் முஸ்லிம்களின் ஜனத்தொகையைக் குறைக்க அரசு உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், முஸ்லிம் பெண்களின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தி முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கு உழைக்க வேண்டும். கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற முயற்சிகளை மேற்கொள்ளாமல், அவர்கள் அதிகளவு பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என வாதம் செய்வது சரியல்ல.

 

-     நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்

-     தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

 

 

No comments: