Wednesday, December 18, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (19)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! 

 நாள்: 19


மது போதையில் நண்பனை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட இளைஞர்கள்.....!

மதுப்பழக்கம் மனித உறவுகளை சிதைத்து வருகின்றன என்பதற்கு பல நிகழ்வுகள் சாட்சிகளாக இருந்து வருகின்றன...

சென்னையில் அண்மையில் நடந்த ஓர் அதிர்ச்சி சம்பவம் அதற்கு மேலும் வலுச் சேர்க்கிறது..

இதோ அந்த சம்பவம்...

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் குமார், சோம்நாத், ராசுதாஸ், தீபக் மற்றும் ஜிதேந்திரன். இவர்கள் அனைவரும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

இதில், குமார், ராசுதாஸ் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இவர்கள் அனைவரும் சேத்துப்பட்டில் 3 வீடுகளில் தங்கியுள்ளனர்.


விடுமுறை நாளான ஞூயிற்றுக்கிழமை அனைவரும் பர்மா பஜார் செல்வதற்காக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடக்ரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினார்கள்.

ரயிலில் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தவர்களுக்கு இடையில் திடீரென பிரச்சினை வெடித்தது.

குமார் உட்பட அனைவரும் மது குடித்திருந்த நிலையில், குமாரின் மனைவியை மற்ற 4 பேரும் சேர்ந்து கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.


இதனால் ஆத்திரம் அடைந்த குமார், நண்பர்களை கண்டித்தார்.

தனது மனைவியை கிண்டல் செய்வதை நிறுத்தும்படி கோபமாக கூறினார்.

ஆனால், நண்பர்கள் கேட்கவில்லை...மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையம் வந்தபோது இவர்களின் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது.

குமாருக்கும் மற்ற 4 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

ரயிலின் வாசல் அருகே நின்று கொண்டு அவர்கள் சண்டை போட்டனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் குமாரை மற்ற நண்பர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டனர்.


இதை சற்றும் எதிர்பார்க்காத குமாரின் மனைவி விஷாலி அதிர்ச்சி அடைந்தார்.

அபயக் குரல் எழுப்பினார். ரயில் கடற்கரை நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த காவலர்களிடம் நடந்த விவரங்களை கூறினார்.

உடனே, காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, கால் உடைந்த நிலையில் குமார், தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

காவலர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குமாரின் நண்பர்கள் சோம்நாத், ராசுதாஸ், தீபக், ஜிதேந்திரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

பார்த்தீர்களா நண்பர்கள், நல்ல நட்பு, மது போதையால் எப்படி சிதைந்து போனது..

அத்தோடு, நண்பருக்கு கால் உடைந்தும் போனது...

எல்லாவற்றிற்கும் மதுதான் காரணம்...

மதுப்பிரியர்கள் இதனை புரிந்துக் கொண்டால் சரி....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: