Saturday, December 21, 2013

பிஜேபியுடன் கூட்டணி......!

பிஜேபியுடன் கூட்டணி இல்லையாம்....! 

திமுக தலைவர் கருணாநிதி விளக்கம்....!!


தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் (சென்னை பதிப்பு) கடந்த 20.12.2013 அன்று திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேட்டியை வெளியிட்டது.

அதில்,பிஜேபியின் பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி மிகச் சிறந்த நிர்வாகி என திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதன் மூலம் பிஜேபியிடம் கூட்டணி அமைக்க கருணாநிதி விரும்புவது வெளிச்சமாகி உள்ளதாக புயல் வேகத்தில் நாடு முழுவதும் கருத்து பரவியது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

முதலில், கருணாநிதி அளித்த பேட்டியில் இருந்து சில முக்கிய கருத்துக்களை பார்ப்போம்..

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைக்காமல் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழக்கு  கடந்த 20.12.2013 அன்று பேட்டி அளித்துள்ள கருணாநிதி, பிஜேபியின் பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடியை புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தம்மை பொறுத்தவரையில் நரேந்திர மோடி மிகச் சிறந்த நிர்வாகி என புகழாரம் சூட்டியுள்ள கருணாநிதி, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி மிகப் பெரிய அளவுக்கு பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.


நல்ல நிர்வாகி என்பதால் அவரை குஜராத் மக்கள் தொடர்ந்து ஆட்சியில் பொறுப்பில் அமர செய்ததாக குறிப்பிட்டுள்ள கருணாநிதி, பிரதமர் பொறுப்புக்கு அவர் தகுதியானவர் என்பதை வாக்காளார்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள், ராகுல் காந்தியா அல்லது மோடியா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி, இதுவும் வாக்காளர்களே முடிவு செய்ய வேண்டிய விஷயம் என கருத்து தெரிவித்துள்ளார்.

பிஜேபியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள கருணாநிதி, வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அமைத்து வரலாற்றை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் இந்த கருத்தால் அவர் பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக தகவல் பரவியது.


இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி,  காங்கிரஸ் கட்சியுடனும், பாஜகவுடனும் தி.மு.கழகம் கூட்டணி கிடையாது என்று பொதுக்குழுவில் தாம்  வெளிப்படையாகப் பேசியதாக விளக்கம் அளித்தார்.

அந்தப் பேச்சினைப் பத்திரிகையாளர்களுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள சிலர் வேண்டுமென்றே தன்னுடைய கருத்தைத் திரித்து, தான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போல பேசி வருகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைபட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னை மிகவும் வருந்தச் செய்வதாகும் என்றும் ஏன் கண்டிக்கத்தக்க செயல் ஆகும் என்றும் கருணாநிதி கூறினார்.


எனவே, பத்திரிகையாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே தான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப்பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.

எனினும், கருணாநிதி மற்றும் திமுகவில் உள்ள சில முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் இன்னும் பிஜேபியின் பக்கமே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும்போதோ, அல்லது தேர்தல் முடிந்த பிறகோ, திமுக பிஜேபிக்கு ஆதரவான நிலையை எடுக்கும் என்று கூறப்படுகிறது.


வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அமைத்து வரலாற்றை உருவாக்கியதாக கருணாநிதி வெளியிட்ட கருத்து மற்றும்  பிஜேபியின் பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடியை கருணாநிதி புகழ்ந்து இருப்பதன் மூலமும், பிஜேபி கூட்டணியில் திமுக சேரும் வாய்ப்பு இன்னும் உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், பத்திரிகையாளர்
========================================

No comments: