Sunday, December 22, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (26)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!

நாள் : 26



புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்வு......!

ஆய்வில் அதிர்ச்சி தகவல்........!!

புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக, தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.


இந்த பண்டிகை காலங்களில் அதிகமான இளம் பருவத்தினரும் மது அருந்தி வருவது தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெல்லி, மும்பை, கோவா, பெங்களூர், சண்டிகார் உள்ளிட்ட பெருநகரங்களில் ‘ஏ.எஸ்.டி.எப்.’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில், பிறந்த நாள் மற்றும் வார இறுதி நாட்களில் மது குடிப்பவர்களை விட, டிசம்பர், ஜனவரி ஆகிய குளிர்கால மாதங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்து இருக்கிறது.


குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்துவோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டுகளில், பண்டிகை காலத்தில் மது அருந்துவோரின் வயது 28-ல் இருந்து தொடங்கியது.

ஆனால் தற்போது ‘டீன்-ஏஜ்’ பருவத்தினரே, குறிப்பாக 14 வயதில் இருந்தே மது அருந்துவது தெரியவந்துள்ளது.


மேலும் வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 180 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு, இளம் வயதினரிடையே காணப்படும் அதிக பணப்புழக்கம், வெளிநாட்டு மதுபானங்கள் அதிகமாக கிடைப்பது, பெற்றோரின் கண்டிப்பற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக பெற்றோரின் கண்டிப்பற்ற தன்மையே பெருநகரங்களில் ‘டீன்-ஏஜ்’ பருவத்தினர் மது அருந்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


ஆக, தீமை என்று நன்கு தெரிந்தும், உடல்நலம் பாதிக்கும் என்று நன்கு உணர்ந்தும், இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது, அதிகரித்து வருவது ஆய்வில் உறுதியாக தெரிய வந்துள்ளது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: