Thursday, August 8, 2024

பன்முகத்தன்மையை சீர்குலைக்க முயற்சி...!

வக்பு வாரிய திருத்த மசோதா மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க மோடி அரசு முயற்சி...!

அமைதியான சமூகத்தில் வகுப்புவாத துவேசத்தை உருவாக்க நடவடிக்கை....!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் 

பி.வி.அப்துல் வஹாப் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஆக.08- வக்பு வாரிய திருத்த மசோதா கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம், நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலங்களவை உறுப்பினர் பி.வி.அப்துல் வஹாப் குற்றம்சாட்டியுள்ளார். 

வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் கடந்த 07.08.2024 அன்று பேசிய அவர், அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஏற்கனவே நாட்டில் உள்ள பன்முகத்தமையை சீர்குலைக்க மோடி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அமைதியான சமூகத்தில் வேற்றுமையையும் வெறுப்பையும் விதைத்து வகுப்புவாத துவேசத்தை மோடி அரசு பரப்பி  அதன்மூலம் அரசியல் லாபம் பெற துடித்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் தேர்தலில் மக்கள் அதற்கு சரியான பதிலடி கொடுத்து, மோடி அரசின் எண்ணங்களை துடைத்தனர். 

பா.ஜ.க. பாடம் கற்றுக் கொள்ளவில்லை:

ஏற்கனவே இருந்த இடங்களை விட மிக குறைந்த அளவுக்கு பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைத்தது. பா.ஜ.க.விற்கு நாடாளுமன்றத் தேர்தலில் அதிருப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், பா.ஜ.க. இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. 300க்கும் அதிகமான இடங்களை பெற்ற பா.ஜ.க. தற்போதைய தேர்தலில் அந்த பலத்தை எட்ட முடியவில்லை. இருந்தும், மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க மீண்டும் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. வகுப்பு துவேசத்தை பரப்பு முயற்சி செய்கிறது. 

வக்பு வாரிய மசோதா மூலம் புதிய முயற்சிகளை செய்வதை நான் எச்சரிகிறேன். இதுபோன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். 

அரசுக்கு அதிகாரம் இல்லை:

வக்பு வாரியத்தில் மூக்கை நுழைப்பதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அல்லது தலையிடன எந்த உரிமையும் இல்லை. நான் என்னுடைய நிலத்தை சில நல்ல காரியங்களுக்காக வக்பு செய்கிறேன். அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி பணிகளை செய்ய வேண்டியது வக்பு வாரியத்தின் கடமையாகும். அதனை தான் வக்பு வாரியம் செய்து வருகிறது. அந்த கடமையை சீர்குலைக்கும் முயற்சியாகதான் வக்பு வாரிய மசோதா உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. அரசின் இந்த முயற்சியை இ.யூ.முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்க்கும் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். 

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்:

மேலும் வயநாடு நிலச்சரிவு குறித்தும் தனது பேச்சில் குறிப்பிட்ட அவர், நான் வயநாடு தொகுதியைச் சேர்ந்தவன். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் புள்ளிவிவரங்களின்படி 200 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிழையில் ஒன்றிய அரசு சரியான முறையில் பிரச்சினையை கையாண்டு, மக்களுக்கு புதிய வாழ்க்கை கிடைக்க உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்த பிரச்சினையில், ஒன்றிய. மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நிலச்சரிவு பிரச்சினையை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான உதவிகள் கிடைக்க வேண்டும். அதுதான் எங்களின் விருப்பம் ஆகும். வயநாட்டில் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வனத்துறை மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்புகள் ஏற்படாது.

காஷ்மீர் மக்களுக்கு உதவி:

காஷ்மீரில் தற்போது நல்ல நிலைமை ஏற்பட்டு இருப்பதாக அரசு கூறுகிறது. அது உண்மையாக இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். அங்கு சுற்றுலா மேம்பட வேண்டும். காஷ்மீரில் பிரச்சினையால், ஏராளமான மாணவர்கள் கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு வந்து கல்வி பயின்று இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளை தேடி இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்புகிறார்கள்.ஆனால் அதற்கான சூழ்நிலையில் தற்போது சரியாக இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. எனவே, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா மற்றும் காஷ்மீரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். 

கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு உரிய திட்டங்களை கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவதை ஒருபோதும் தடுக்க கூடாது என்றும் வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு பி.சி.அப்துல் வஹாப் பேசினார். 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

============================

No comments: