Friday, August 30, 2024

பலாப்பழம்.....!

 

பலாப்பழம் சாப்பிட்டால் ஆற்றல் அதிகரிக்குமா?

 

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்திற்கு, மக்களிடையே எப்போதும் ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதேபோன்று, மா, வாழை பழங்களையும் மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கமாகவே உள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், பாண்டிய நாட்டில் மாம்பழமும், சோழ நாட்டில் வாழையும், சேர நாட்டில் பலாப்பழமும் அதிகமாக விளைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், அந்தப் பகுதிகளின் மண் வளம் என கூறப்படுகிறது.

வெவ்வேறு நல்ல சுவை கொண்ட இந்த முக்கனிகளை ஒன்று சேர்த்தும், அல்லது தனித்தனியாகவும் உண்பது உடல் நலத்துக்கு நன்மை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. வாழைப்பழம் வாழ வைக்கும்., மாம்பழம் இளமை மங்காமல் பாதுகாக்கும்., பலாப்பழம் பலத்தைக் கொடுக்கும் என்ற கருத்து பழைய தமிழ் பாடல்களில் உள்ளது. இந்தியாவில் பலாப்பழத்தின் தாயகமாக கேரளம் கருதப்படுகிறது. இதேபோன்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சர்வ சாதாரணமாக பலா மரங்கள் இருந்து வருகின்றன. பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப் பல பெயர்கள் உண்டு.

பலாப்பழம் – சில சுவையான தகவல்கள்:

உலகின் மிகப்பெரிய பழம் என்ற பெருமையைப் பலாப்பழம் பெற்றுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழம், பல்வேறு வழிகளில் உணவில் சேர்க்கப்படுகிறது. இது பங்களாதேஷின் (வங்கதேசம்) தேசிய பழமாகும். உடலுக்கு ஆரோக்கியமான நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக பலாப்பழம் இருந்து வருகிறது. இது நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கும்போது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பலாப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. அத்துடன்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ள பலாப்பழம், பல்வேறு நோய்த்தொற்றுகளின் அபாயங்களைக் குறைக்கிறது.

பலாப்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளதால், சருமத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பலாப்பழம், முன்கூட்டிய வயதைத் தடுக்கிறது. பலாப்பழத்தில் லிக்னான்ஸ், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சபோனின்கள் எனப்படும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன, அவை புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே புற்றுநோயைத் தடுக்கும் பழமாக பலாப்பழத்தை நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற எளிய சர்க்கரை மூலக்கூறுகள் இருப்பதால் பலாப்பழம் ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாக அறியப்படுகிறது. ஆற்றல் ஊக்கத்திற்கு நாள்தோறும் பலாப்பழம் சாப்பிடுவது நன்மையை நிச்சயம் தரும். உங்களுக்கு வலுவான எலும்புகள் இருக்க வேண்டும் என விருப்பம் இருக்கிறதா? அப்படி விருப்பம் இருந்தால், பலாப்பழம் சாப்பிடுங்கள். பலாப்பழத்தில் மக்னீசியம் ஆரோக்கியமான சமநிலையில் காணப்படுகிறது. எனவே பலாப்பழத்தின் நுகர்வு எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது என்று சொல்லப்பட்டு வருகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியுடன் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துகிறது. இரத்த சோகையை தடுக்கிறது.

நன்மைகளோ நன்மை:

ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பலாப்பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள பலாப்பழம், அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை கொண்டது. பலாப்பழம் உடல் எடையை குறைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பலாப்பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்ககிறது.

பலாப்பழம் சாப்பிடுவதால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாது. பலாப்பழம் வயிற்று சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. பலாப்பழம் உடலுக்கு மிகவும் நன்மை அளித்தாலும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சினை இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்று அதன்பிறகு பலாப்பழத்தை சாப்பிட வேண்டும்.

ஏக இறைவனின் அருட்கொடை:

ஏக இறைவனின் படைப்புகளில் ஒவ்வொரு பழமும் வெவ்வேறு தன்மைகளுடன், ஏராளமான பலன்களையும், சக்திகளையும் மனித இனத்திற்கு தரும் வகையில் இருந்து வருகின்றன. ஒரே மண்ணில் விளையும் இந்த பழங்கள், சுவையிலும் மாறுப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் பலாப்பழம் ஏக இறைவினின் மிகப்பெரிய அருட்கொடையாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், சுவை மட்டுமல்லாமல், அதிக ஆற்றல் கொடுக்கும் பழமாக பலாப்பழம் இருப்பதாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் முக்கனிகளை சாப்பிடக் கூடாது என்றும், குறிப்பாக பலாப்பழம் சாப்பிடக் கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால், பலாப்பழ விதைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. பலாப்பழ விதை மாவில் வைட்டமின் சி, ஃபிளவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, மருத்துவ நிபுணர்கள் பலரும் நீரிழிவு நோயாளிகள், பலாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டு, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனைகளை தருகிறார்கள். ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த பலாப்பழத்தை வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக சாப்பிட்டு, எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முயற்சி செய்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருப்போமா!

 

-            எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: