Sunday, June 30, 2024

இந்தியாவின் சொர்க்கப் பூமி தமிழ்நாடு.....!


இந்தியாவின் சொர்க்கப் பூமி தமிழ்நாடு

 

-   எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -


இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 698 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கொள்கை என்ற ரீதியில் பாசிச அமைப்புகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு. மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பதை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக வட மாநிலங்களில் அவ்வவ்போது வன்முறைகள் வெடிக்கின்றன. அந்த வன்முறைகளில் மோதல்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகின்றன.

அண்மையில் நடந்துமுடிந்த 18வது மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய பத்து ஆண்டு கால சாதனைகளை முன்வைத்து வாக்குகளை கேட்கவில்லை. மாறாக. இந்து-முஸ்லிம் விவகாரத்தை முன்வைத்து மட்டுமே வாக்குகளைச் சேகரித்தார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சில பா.ஜ.க. மூத்த தலைவர்கள், முஸ்லிம்கள் மீது விஷத்தை கக்கினார்கள். முஸ்லிம்களை எந்தளவுக்கு சிறுமைப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு சிறுமைப்படுத்தி அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களால் முழு பலத்துடன் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

வட மாநிலங்களில் தொடரும் வன்முறைகள்:

நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்த காரணத்தினால், வட மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்து இருப்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது சிலர் அட்டகாசங்களை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய அரசுகள் கண்டுக் கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கின்றன.

மத்திய பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வீட்டிற்குள் மாட்டுக்கறி இருந்ததாக கூறி, அந்த வீட்டை இடித்து தள்ளியுள்ளது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதேபோன்று, முஸ்லிம் வணிகர் ஒருவர்,  கறி வணிகம் செய்வதாக குற்றம்சாட்டி, அவரது வணிக நிறுவனத்தை ஒரு கும்பல் சூறையாடியுள்ளது. இப்படி, பல சம்பவங்கள் மீண்டும் நாட்டில் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நாட்டில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. எனினும், இந்த தீர்ப்பின் உண்மையை புரிந்துகொள்ளாமல், பாசிச அமைப்புகள் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையை நடத்தி வருகிறார்கள்.

ஆண்டனி பிளிங்கன் குற்றச்சாட்டு:

இப்படி, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், அது உண்மை தான் என அமரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.

மத சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்துவர் மற்றும பழங்குடியின தலைவர்கள், சில மாநில தலைவர்கள் இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெறுப்பு பேச்சு:

இந்தியாவில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள மக்களும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்க கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று அமரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மூலம் ஒரு உண்மை நமக்கு நன்கு தெரியவருகிறது. இந்தியாவில், சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுப்பு பேச்சுகளை கடந்துச் செல்ல வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.

இத்தகைய வெறுப்பு பேச்சுகள், வன்முறைகள் ஒருசில மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தென்னிந்தியாவில் பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகளின் சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என உறுதியாக கூறலாம்.

தென்னிந்தியாவில், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை விதைத்து, அரசியல் அறுவடையை பா.ஜ.க. செய்து வருகிறது. எனினும், மிகப்பெரிய அளவுக்கு அவர்களால் இந்த மாநிலங்களில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை. தென்னிந்திய மக்கள் எப்போதும் அமைதியை விரும்பும் மக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைத்து சமூக மக்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

 சொர்க்கப் பூமி தமிழ்நாடு:

 

வட மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகள் தங்களுடைய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்தாலும், தமிழகத்தில் அவர்களால் காலுன்ற முடியவில்லை என்றே கூறலாம். தமிழக மக்கள் எப்போதும் அமைதியை விரும்பும் மக்கள். சமூக நீதியில் உறுதியாக இருக்கும் மக்கள். மதசார்பற்ற கொள்கையில் பிடிப்புடன் வாழும் மக்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற சமூக நீதி தலைவர்களின் பூமியான தமிழ்நாடு, அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் அற்புதமான பூமியாக இருந்து வருகிறது.

”வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு“ என்ற அழகிய முதுமொழிக்கு ஏற்ப, தமிழ்நாடு, அனைத்து மக்களையும் சாதி, மதம், பேதம் பார்க்காமல், வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் பாசிச அமைப்புகள் எவ்வளவு முயற்சி செய்தபோதும், மக்கள் மத்தியில் மத விஷத்தை இங்கு தூவ முடியவில்லை. அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் தமிழ்நாட்டில் அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கச்சியாக, மாமான் மச்சானாக அன்பு செலுத்தி, சகோதர நேயத்துடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

பேரிடர் காலங்களில் ஓடோடிச் சென்று ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து உயிர்களை காப்பாற்றுகிறாகள். நிதியுதவி செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வருகிறார்கள். இந்த நேரத்தில், சாதி, மதம் போன்ற எண்ணங்கள் தமிழக மக்களிடம் ஏற்படுவதில்லை. அனைவரும் மனிதர்கள் தான் என்ற உயர்ந்த எண்ணம் மட்டுமே உள்ளத்தில் எழுந்து, சகோதர பாசத்துடன் அனைவரும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் உதவிகளை, நிவாரணப் பொருட்களை வழங்கி மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன.

எனவே, இந்தியாவின் சொர்க்கப் பூமி தமிழ்நாடு என நாம் குறிப்பிடுகிறோம். இந்த சொர்க்கப் பூமியை நாடிதான், வட மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வளிக்கும் பூமியாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இப்படி வட மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் மத்தியில் சமூக நீதியை தமிழ்நாடு விதைத்து வருகிறது. இந்த சமூக நீதி கொள்கை அந்த மக்களின் சிந்தனைகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

 

வட மாநிலங்களில் இந்து-முஸ்லிம் என்ற நிலைப்பாட்டில் இருந்துவந்த அம்மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்கள், தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் நிலவும் சகோதரத்துவம், ஒற்றுமை, அமைதி, மற்றவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் பண்பு ஆகியவற்றைக் கண்டு வியப்பு அடைகிறார்கள். அதை தங்கள் வாழ்வில் கொண்டு வர அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இப்படி, மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் பூமியாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சகோதரத்துவத்தை விரும்பும் பூமியாக இருந்து வருகிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பூமியாக இருக்கிறது. அனைவரின் வளர்ச்சியில் அக்கறைச் செலுத்தும் பூமியாக இருக்கிறது. உண்மையில் தமிழ்நாடு ஒரு சொர்க்கப் பூமிதான். இந்த சொர்க்கப் பூமியின் அமைதியை சீர்குலைக்க பாசிச அமைப்புகள் செய்யும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது. எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காது. தமிழ்நாடு மக்கள் அமைதியை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள். காரணம், தமிழ்நாடு சமூக நீதிக்கான பூமி. இந்தியாவின் சொர்க்கப் பூமி.

===========================

 

 


நூல் மதிப்புரை....!

 நூல் மதிப்புரை


நூல் : தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024

வெளியீடு : முரசொலி,

180, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,

சென்னை - 600 034.

தொலைபேசி: 044-2817 9191

விலை : ரூ.3,000/-

முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், முரசொலி நாளிதழ் சார்பில் 'தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024' என்ற அற்புதமான அறிவுப் புதையல் நூல் வெளியிடப்பட்டுள்ளது. 544 பக்கங்கள் கொண்டு இந்த நூல், 'கலைஞர் நம் பொக்கிஷம்' என்ற தந்தை பெரியாரின் கட்டுரையுடன் தொடங்கி, 'தண்ணார் முழு நிலவே - தட்டாமல் நீ வந்துவிடு' என்ற முரசொலி செல்வம் எழுதியுள்ள கட்டுரையுடன் நிறைவு பெறுகிறது. 

பேரறிஞர் அண்ணா, இனமானப் பேராசிரியர், முரசொலி மாறன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் எழுதியுள்ள கட்டுரைகளுடன், 'கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன்' என்று கலைஞர் அவர்கள்  கடந்த 23.09.1992-ல் முரசொலியில் எழுதிய கடிதமும் நூலில் இடம்பெற்று, நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. 

அத்துடன் 'கட்சித் தலைவர்களின் பார்வையில் கலைஞர்' என்ற பகுதியில், கி.வீரமணி, இரா.நல்லகண்ணு, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர் மொகிதீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகிய தலைவர்கள்,  கலைஞர் அவர்களைப் பற்றி எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்து இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. 

'பத்திரிகையாளர்களின் பார்வையில் கலைஞர்' என்ற பகுதியில், இடம்பெற்றுள்ள 21 கட்டுரைகளும் கலைஞரின் எழுத்துப் பணி, பத்திரிகை துறை மீது அவர் கொண்டிருந்து ஈடுபாடு, அயராத உழைப்புடன் கூடிய ஊடகப் பணி ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறி, இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அற்புதமான ஊடகப் பாடத்தை சொல்லி தருகின்றன.  

'கலையுலகினர் பார்வையில் கலைஞர்" 'கவிஞர்களின் பார்வையில் கலைஞர்' 'கல்வியாளர்களின் பார்வையில் கலைஞர்' 'உடன்பிறப்புகளின் பார்வையில் கலைஞர்' 'இளைஞர்கள் பார்வையில் கலைஞர்' 'பாசறையில் தொகுத்த முத்துக்கள்' 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்' என்ற மற்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 66 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டுரைகளில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிப்பேரரசு வைரமுத்து, நீதியரசர் கே.சந்துரு, உள்ளிட்டோர், கலைஞர் அவர்களைப் பற்றி எழுதியுள்ள ஒவ்வொரு வரிகளையும் படிக்கும்போது, தனது தனித் திறமையால், ஒவ்வொரு துறையிலும் கலைஞர் அவர்கள் எப்படி, கோலாச்சி மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்தார் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு கிடைக்கிறது. 

நூலின் பல்வேறு பகுதிகளில், கலைஞர் அவர்களின் அழகிய சிந்தினையை தூண்டும் பொன்மொழிகள் இடம்பெற்று, நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. அத்துடன், நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைகளுக்கும், அற்புதமான புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்த,  நூலை உருவாக்கிய முரசொலி குழுவினரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். 

மேலும்,  நூலில், சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 'கலைஞர் அவர்களின் திருவுருவப்படம் திறப்பு', திருவாரூர் மாவட்டம் காட்டூரில், 'கலைஞர் கோட்டம் திறப்பு', மதுரையில் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு', சென்னை கிளாம்பாக்கத்தில் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு', சென்னை மெரினாவில் 'கலைஞர் நினைவிடம் திறப்பு', மதுரையில் 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு' என பல்வேறு புதிய திட்டங்கள், பணிகள் ஆகியவை தொடர்பான செய்திகள், மனதைக் கவரும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கண்டிப்பாக படித்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முரசொலி நிர்வாகம் மிக அழகிய முறையில் இந்த 'தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024' என்ற நூலை வெளியிட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் குறித்து எவ்வளவு எழுதினாலும் அது குறைவு என்றே கூற வேண்டும். 544 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தகவல்களும், கருத்துகளும், தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பயன் அளிக்கும் செய்திகளாக உள்ளன. 

மிகவும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம் லட்சக்கணக்கான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞர் அவர்களை குறித்தும், தமிழகத்திற்கும் தமிழர்களின் நலனுக்காக கலைஞர் அவர்கள் எப்படி பணியாற்றினார், உழைத்தார் என்பது குறித்தும் அறிந்துகொள்ள நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், தமிழக மாணவச் சமுதாயமும், இளைஞர்களும் கலைஞர் அவர்கள் குறித்து, அரிய செய்திகளையும் தகவல்களையும், விளக்கங்களையம், பெற முடியும் என உறுதியாக கூறலாம். 

'தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024' என்ற இந்த நூலை மற்ற நூல்களைப் போன்று சாதாரண நூல் கிடையாது. பல அரிய தகவல்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும். மறைந்த முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களை குறித்தும், அவரது ஆளுமை திறன், அவரது உழைப்பு, அவரது சாதனைகள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. 

- ஜாவீத்


Saturday, June 29, 2024

சில மருத்துவத் தகவல்கள்....!

மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம் - சில மருத்துவத் தகவல்கள்....!

ஏக இறைவன் வழங்கியுள்ள இந்த மனித வாழ்க்கை என்பது, பல்வேறு கலவைகளின் கூட்டுப் பொறியலாகும். மகிழ்ச்சி, இன்பம், சோகம், சோர்வு, துன்பம், மன அழுத்தம் என பல்வேறு நிலைகளை மனிதன், தற்போது கடந்துகொண்டு இருக்கிறான். வாழ்க்கை எப்போதும் ஒரே நிலையாக எப்போதும் இருப்பது இல்லை. அப்படி ஒரே நிலையாக இருந்தால், அது சுவையான வாழ்க்கையாக இருக்கவே முடியாது. இப்படிப்பட்ட வாழ்க்கையில், சில பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்கள் எப்போதும் சோகமாகவும், சோர்வாகவும், மன அழுத்தத்துடனும் காணப்படுவார்கள். இதேபோன்று ஆண்களிலும் சிலர் இருக்கிறார்கள். 

இப்படி, ஒருவர் மகிழ்ச்சியாகவும் மற்றவர்கள் சோகமாகவும் இருக்க காரணம் என்ன? என்று மருத்துவ ரீதியாக ஆராய்ந்தால், அதற்கு 'டோபமைன்' குறைபாடு மற்றும் அதிகப்படியான 'டோபமைன்' முக்கிய பங்கு வகிக்கிறது என்ற விளக்கம் கிடைக்கிறது.  டோபமைன் மனிதனின் இன்பங்களையும் ஆசைகளையும் பாதிக்கிறது.

டோபமைன் என்பது மனிதனின் உடலில் இயற்கையாக நிகழும் ஒரு பொருள். டோபமைன் மருந்தாகப் பயன்படுத்தும்போது, ​​மாரடைப்பு, அறுவை சிகிச்சை, அதிர்ச்சி, சிறுநீரகச் செயலிழப்பு, இதய செயலிழப்பு மற்றும் பிற ஒத்த நிலைமைகளால் ஏற்படும் அதிர்ச்சிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது ஐனோட்ரோபிக் முகவர்கள் எனப்படும் மருந்துகளின் குழுவிற்கு சொந்தமானது.

இரண்டு வகையான பெண்கள்:

உலகில் இரண்டு வகையான பெண்கள் உள்ளனர். சில பெண்கள் எப்போதும் சோகமாகவும், சோர்வாகவும், மன அழுத்தத்துடனும் காணப்படுகிறார்கள். மற்ற ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நிச்சயமாக, சூழ்நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆனால் நமது மூளையில் இருக்கும் 'டோபமைன்' நமது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பாதிக்கிறது.

டோபமைன் என்றால் என்ன? டோபமைன், மகிழ்ச்சியான ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது, இது நமது மூளையில் உள்ள ஒரு நரம்பியக்கடத்தி ஆகும், இது மூளை செல்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவுகிறது. ஒரு செல்லில் இருந்து மற்றொன்றுக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது. இது நமது இயக்கம், நினைவகம், மனநிலை மற்றும் கவனம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மூளையில் டோபமைன் அளவு போதுமானதாக இருக்கும்போது, நமது மனநிலை பொதுவாக சிறப்பாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு நபரின் நேர்மறையான திறனை அதிகரிக்க இது சிறந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம், மூளையில் டோபமைன் அளவு குறைந்தால், பெண்களின் மனநிலை மோசமாகி, வேலை செய்யும் திறன் குறையும். மகிழ்ச்சியான ஹார்மோனைத் தவிர, டோபமைன் உடலின் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக, இரத்த ஓட்டம், செரிமானம், நிர்வாக செயல்பாடு, கவனம், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் வலி போன்றவை. 

டோபமைன் அரிய தகவல்கள்:

டோபமைன் தனியாக வேலை செய்யாது. இது மற்ற நரம்பியக்கடத்திகள் மற்றும் செரோடோனின் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களுடன் இணைந்து செயல்படுகிறது. டோபமைனின் குறைந்த அளவு மனச்சோர்வு மற்றும் கால் நோய்க்குறி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு டோபமைன் உங்களை சோர்வு, மனநிலை, அசையாமை மற்றும் பல அறிகுறிகளை ஏற்படுத்தும். டோபமைன் நரம்பியக்கடத்தி உங்கள் மூளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. டோபமைனை உருவாக்கும் உங்கள் மூளையின் பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டால், மூளையில் டோபமைன் இல்லாதிருக்கலாம். மூளையில் டோபமைனின் செயல்பாடு குறைவதற்கு சில முக்கிய காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

அதன்படி, பார்கின்சன் நோயை குறிப்பிடும் மருத்துவர்கள், அதுகுறித்து சிறிய விளக்கமும் அளிக்கிறார்கள். பார்கின்சன் நோய் என்பது மத்திய நரம்பு மண்டலத்தின் சிதைவுக் கோளாறு ஆகும். இது நடுக்கம், தசை விறைப்பு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பார்கின்சன் நோய்க்கான முக்கிய காரணம், டோபமைன் உற்பத்தி செய்யும் செல்களை இழப்பதாகும். மூளையில் டோபமைன் அளவு குறைவதால், மூளையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.

அடுத்ததாக கவனக்குறைவாகும். இது 'கவனம் பற்றாக்குறை ஹைபராக்டிவிட்டி கோளாறு' (ADHD) என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தை பருவத்தில் தொடங்கி முதிர்வயது வரை நீடிக்கும் ஒரு மனநல கோளாறு. ADHD உள்ள பெண்களுக்கு கவனம் செலுத்துவது மற்றும் உணர்ச்சிகரமான நடத்தையை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கலாம். வல்லுநர்கள் ADHD-க்கு டோபமைன் குறைபாடு காரணமாகக் கூறுகின்றனர். எனவே, சிகிச்சைக்காக டோபமைன் அளவை அதிகரிக்கும் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

போதைப்பொருள் பயன்படுத்துவது டோபமைன் அளவை பாதிக்கும். 2017-ஆம் ஆண்டின் ஆய்வின்படி, போதைப்பொருள் துஷ்பிரயோகம் டோபமைன் அளவையும் பாதிக்கிறது. மீண்டும் மீண்டும் மருந்து உபயோகிப்பது டோபமைன் செல் செயல்பாட்டைக் குறைக்கும். இதேபோன்று, உணவு டோபமைன் அளவை பாதிக்கும். உதாரணமாக, கொழுப்பு, குப்பை உணவு மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவுகள் அதிக அளவு வீக்கத்தை ஊக்குவிக்கும். டோபமைன் அமைப்பையும் மாற்றலாம். கூடுதலாக, புரதக் குறைபாடு டோபமைன் அளவையும் பாதிக்கிறது.மேலும்,  உடல் பருமன் டோபமைன் அளவையும் கணிசமாக பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

டோபமைன் குறைபாட்டின் அறிகுறிகள்: 

மந்தமான உணர்வு, சோர்வு, கவனம் இல்லாமை, பதட்டம், இன்பம் இல்லாமை, நம்பிக்கையின்மை, தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கக் கலக்கம். தசை வலிகள், அமைதியற்ற கால் நோய்க்குறி, கோபம், குறைந்த சுயமரியாதை, பதட்டம், மனக்கிளர்ச்சி மற்றும் நிறுவன திறன்கள் இல்லாமை போன்றவை டோபமைன் குறைபாட்டின் அறிகுறிகளாகும். இயற்கையாகவே டோபமைன் அளவை அதிகரிக்க முடியும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். சில இயற்கை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பெண்கள் மருந்து இல்லாமல் இயற்கையாகவே டோபமைன் அளவை அதிகரிக்கலாம்.

டோபமைன் அமினோ அமிலங்களான டைரோசின் மற்றும் ஃபைனிலாலனைனில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இவை இரண்டும் புரதம் நிறைந்த உணவுகளில் இருந்து பெறலாம். இந்த அமினோ அமிலங்களின் அதிக நுகர்வு டோபமைன் அளவை அதிகரிக்கிறது. விலங்குகளின் கொழுப்பு, வெண்ணெய் மற்றும் எண்ணெய் போன்ற கொழுப்புகள் டோபமைன் அளவைக் குறைக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடல் மற்றும் மூளை நெருங்கிய தொடர்புடையவை என்றும், இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மனநிலை மற்றும் நடத்தைக்கு நன்மை பயக்கும் டோபமைனை உருவாக்க முடியும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. அதிக அளவு புரோபயாடிக் பாக்டீரியாக்கள் மனிதர்களில் கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்: 

எண்ட்-வோர்பின் அளவை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உடற்பயிற்சி அவசியம். உடல் செயல்பாடு மூளையில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. டோபமைன் அளவை அதிகரிக்க உடற்பயிற்சி உதவுகிறது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. காலையில் எழுந்திருக்கும் நேரத்தில் டோபமைன் அதிக அளவில் வெளியிடப்படுகிறது. மாலையில் அதன் அளவு இயற்கையாகவே குறைகிறது. ஆனால் தூக்கமின்மை இந்த இயற்கை சுழற்சிகளை சீர்குலைக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. போதுமான அளவு டோபமைன் நமது மூளையை அதன் முழு திறனில் செயல்பட வைக்கிறது என்பதை நினைவில் கொண்டு ஏக இறைவன் வழங்கியுள்ள அழகிய வாழ்க்கையை சிறப்பாக வாழ முயற்சி செய்வோம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


தமிழகத்தின் முதல் மஸ்ஜித்...!

புதருக்குள் குவிந்து கிடக்கும் இஸ்லாமிய புதையல்....!

திருச்சியில் 1328 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழகத்தின் முதல் மஸ்ஜித்...!!

'புதருக்குள் குவிந்து கிடக்கும் இஸ்லாமிய புதையல்' என்ற தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். புதர்களை தேடிச் சென்று ஆய்வு செய்தபோது, பல அற்புதமான இஸ்லாமிய புதையல்கள் கிடைத்தன என்பதற்கு சில வரலாற்றுச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகின்றன. 

1964-65-ஆம் ஆண்டுகளில், 30 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு சொத்துகளை மீட்டிவிடலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டாபோது, புகழ்பெற்ற இஸ்லாமிய எழுத்தாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மூத்த தலைவருமான மறைந்த நாவலர் எம்.எம்.யூசுப் சாஹிப் அவர்களின் ஆலோசனையில் பேரில், திருச்சியில், எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்கள் தலைமையில் ஒரு இளைஞர் பட்டாளம் திருச்சியில் உள்ள வக்பு சொத்துகள் மீட்கும் பணியில் இறங்கியது. இந்த இளைஞர் பட்டாளத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் தற்போதைய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் உட்பட பல இளைஞர்கள் இணைந்து வக்பு சொத்துகள் எங்கங்கே உள்ளன என தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

வக்பு சொத்துகள் மீட்புக்குழு:

'வக்பு சொத்துகள் மீட்புக்குழு' என்ற இந்த இளைஞர் பட்டாளத்தின் முயற்சி வீண் போகவில்லை. திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு அற்புதமான இஸ்லாமிய புதையல் இருப்பதை அவர்கள் கண்டனர். இதேபோன்று, செயின் ஜோசப் கல்லூரி மற்றும் ஹோலிகிராஸ் கல்லூரி ஆகியவற்றிற்கு இடையே அந்த காலத்தில் செடிகள் வளர்ந்து காடு போன்று காட்சி அளித்தது. இந்த கட்டிற்குள் சென்று, செடி, கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கு ஒரு சிறிய மஸ்ஜித் இருப்பதை தெரியவந்தது. இப்படி, பல மஸ்ஜித்துகள், தர்காகள் மீட்டெடுக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இதன் சொத்து மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் அவர்கள் கணித்து, 120 கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துகளை மீட்டுவிட்டதாக தம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

30 ஆண்டுகள் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகளை மீட்டிவிடலாம் என்ற விதி, பின்னர் 60 ஆண்டுகள் என்றும், பின்னர் நிரந்தரம் என்றும் திருத்தம் செய்யப்பட்டது. வக்பு சொத்துகளை மீட்பு களம் இறங்கிய திருச்சி இளைஞர் பட்டாளத்தின் மூலம், திருச்சியில் மட்டும், பல அரிய இஸ்லாமிய வரலாற்று தகவல்களை பெற முடிந்தது. 

தமிழ்நாட்டில் இஸ்லாம்:

அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே, அரேபியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வணிக உறவு இருந்தது. வணிகர்கள் மூலம்தான் இஸ்லாம் தமிழ் நாட்டிற்கு வந்தது.  இந்தியாவிற்கும் அரேபியாவிற்கும் ஏற்பட்ட வணிக உறவு மூலமே மிளகும் இஞ்சியும் கிராம்பும் ஏலமும் லவங்கமும் மயில்பீலியும் தந்தமும் சந்தனமும் அகிலும் முத்தும் பவளமும் பட்டும் அரேபியா வழியாக ரோமுக்கும் ஐரோப்பாவரைகூட சென்றது.

இந்த வணிக உறவுதான் மனித உறவுக்கும் கலப்புக்கும் அடிப்படை. உலகம் முழுவதும் இனங்கள் கலப்பதும் அதன் வழியாய் ஒரு புதிய இனம் பிறப்பதும்தான் உலக வரலாறு. கடல் வணிகத்தால் உருவான இந்த ‘இந்திய அரேபியர்கள்’ கடற்கரை ஓரங்களில் வாழ்ந்தனர். சோழ நாட்டில் அரேபியர்கள் வணிகம் செய்ய வந்தபோது, அவர்களை வரவேற்பு மகிழ்ந்தது திருச்சி உறையூர். இந்த உறைவூர், அரேபியர்களின்  வர்த்தக தலைநகராக இருந்தது என்றும் கூறலாம்.

கல்லுப்பள்ளி எனும் மக்கா மஸ்ஜித்:

நபிகள் நாயகத்தின் காலத்திலேயே இஸ்லாம் தென்னகத்துக்கு வந்துவிட்டதால், கேரளாவைபோலவே, தமிழக இஸ்லாமியர்களும் மிகப் பழைமையானவர்கள் என்பதற்கான ஆதாரம் திருச்சியில் உள்ளது. அதில் ஒன்று திருச்சி கோட்டை ரயில்வே நிலையம் எதிரில் உள்ள கல்லுப்பள்ளி. மற்றொன்று ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்கா. இஸ்லாத்துக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பை வலிமையாகச் சொல்ல கிடைத்த ஆதாரமும் திருச்சியில்தான் உள்ளது. அதுதான் கல்லுப்பள்ளி. அதாவது கல்லால் கட்டப்பட்ட மஸ்ஜித் என்பது பொருள். இந்த கல்லுப்பள்ளிதான் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித் ஆகும். இதற்கு சான்றாக கல்வெட்டு ஒன்று அரேபிய லிபியில் அந்த மஸ்ஜித் முகப்பில் பெருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 

அக்கல்வெட்டின்படி, ஹிஜ்ரி 116-ம் ஆண்டு, அதாவது கி.பி 738-ல் இந்த மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து 106 ஆண்டுகளில் இது கட்டப்பட்டுள்ளது என்றால், அதற்கு முன்பே இஸ்லாம் திருச்சியில் நிலைத்துவிட்டதை இந்த மஸ்ஜித் சொல்லாமல் சொல்கிறது. இந்த மஸ்ஜித்தை ஹாஜி அப்துல்லா கட்டியுள்ளதாக வரலாறு சொல்கிறது. இதன் மூலம் மன்னர்கள் வரும் முன்பே வணிகர்கள் வழியாகவும் மார்க்க அறிஞர்கள் மூலமாகவும் இஸ்லாம் தமிழ்நாட்டில் நிலைத்ததை திருச்சியின் கல்லுப்பள்ளி சொல்கிறது.  

அதாவது, 1300 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக திருச்சிக்கும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தக் கல்லுப்பள்ளி  பார்க்கப்படுகிறது. மிகவும் பராம்பரியமான, பழையான இந்த மக்கா மஸ்ஜித் தற்போது சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஜும்ஆ தொழுகையின்போது, சுமார் 300க்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் இந்த மஸ்ஜித்திற்கு வந்து தொழுகை நிறைவேற்றி செல்கிறார்கள். 1328 ஆண்டுகள் பழமையான, பராம்பரியமான இந்த மக்கா மஸ்ஜித் வளாகத்தில், அதனை கட்டிய 5 சஹாபாக்களின் அடக்கஸ்தலங்கள் உள்ளன. 

ஹஜ்ரத் நத்ஹர் வலி தர்கா:

‘ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா’ என்று கொண்டாடப்பட்ட சூஃபி ஞானியான நத்ஹர் வலி கி.பி 900ல் திருச்சிக்கு வந்தார். இவரோடு வந்த சீடர்களை கலந்தர் என்கிறது இஸ்லாம். இந்தியாவில் இஸ்லாம் பரவுவதற்கான காலச் சூழலும் கி.பி 7-9 நூற்றாண்டுகளில் நல்ல முறையில் இருந்தது. இங்கு வந்த சூஃபிகளோடு இங்கேயே இருந்த வேதாந்திகளும் சித்தர்களும் ஒத்துப்போவதை கவனித்த மக்களுக்கு இஸ்லாம் ஈர்ப்பாக இருந்தது. மேலும், சூஃபிகளின் தன்னலமற்ற பணி ஏழைகளைக் கவர்ந்தது. அதுமட்டுமல்ல இங்கிருந்த சாதிய முறைக்கும் வழிபாட்டில் இருந்த ஏற்றத்தாழ்வுக்கும் மாற்றம் தேடிய மக்கள் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டனர். 

சமணர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால்தான் இன்றும் சமண பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். சமணத்தில் புழங்கிய பல அழகிய தமிழ் சொற்கள் இஸ்லாமியர்களின் நாவில் புரள்வதை இன்றும் கேட்கலாம். சமணர்கள் தங்கள் வணங்கும் இடத்தை பள்ளி என்றனர். இஸ்லாமியர்கள் அதை பள்ளிவாசல் என்கின்றனர். சமணர்கள் பயன்படுத்திய நோன்பு, தொழுகை, பெருநாள், சோறு, ஆணம் போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய மக்களின் வாழ்வோடு கலந்துவிட்டதை கவனிக்கும்போதுதான் இந்த உண்மை புலப்படும். மைதிவழியில் வந்த இஸ்லாத்தை தமிழ் மன்னர்கள் வெறுக்காமல் அனுமதித்தனர். 

இப்படி ஓரளவு இஸ்லாமியர்கள் வாழ்ந்துகொண்டிருந்த திருச்சிக்கு சிரியா நாட்டில் பிறந்த ஹஜ்ரத் நத்ஹர் வலி வந்தார். இவரது காலம் கிபி 969 முதல் 1039 வரையாகும். காலத்தால் முற்பட்ட இறைநேசர் சூஃபி நத்ஹர் வலி அவர்களின் பெயரால் திருச்சி நகரையே நத்ஹர் நகர் என்று ஆற்காடு நவாப் அழைக்கும் அளவுக்கு இவர் புகழோடு இருந்தார். 

இஸ்லாமும் இந்தியாவும்:

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அரேபிய-தமிழ் இஸ்லாமியர்கள் கி.பி 916-ல் வாழ்ந்ததாக மஸ்ஊதி என்ற அரபு யாத்ரீகர் எழுதியுள்ளார். இஸ்லாம் மன்னர்களின் வாளால் கொண்டு வரப்பட்டு பரப்பப்படவில்லை.  இதனை இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் ராஜாமுகமது தனது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் இந்தியாவிற்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது'  ஜவகர்லால் நேரு தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூலில் குறிப்பிட்டுள்ளார். 

புதருக்குள் கிடக்கும் இஸ்லாமிய புதையல்களை தேடி ஆய்வு செய்யும்போது, இஸ்லாம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்களின் மனங்களை வென்று அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி, அதன்மூலம் அவர்களோடு ஒன்றிவிட்டது என்பது உறுதியாக தெரியவருகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, June 27, 2024

பெண் கல்வி.....!

 

பெண் கல்வி, இஸ்லாத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும் 

மௌலவி சையத் முஹம்மது ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் பேச்சு 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சமஸ்தா என அழைக்கப்படும் சமஸ்தா கேரளா ஜம்ஈய்யத் உல்-உலமாவின் (அனைத்து கேரள உலமா அமைப்பு), 99வது நிறுவன தின விழா, கடந்த புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டது. விழாவில் சமஸ்தா பொதுச் செயலாளர் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் கொடி ஏற்றி வைத்தார். இந்த அற்புதமான விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், கேரள மாநில தலைவர் பனக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார்.  மேலும், விழாவில் மத்திய முஷாவர உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 சமஸ்தா வரலாறு:

சமஸ்தா என அழைக்கப்படும் சமஸ்தா கேரளா ஜம்ஈய்யத் உல்-உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு), கேரள முஸ்லிம்கள் மத்தியில் மிக உயர்ந்த ஆதரவுடன் இருக்கும் புகழ்பெற்ற சுன்னி அறிஞர்களின் சங்கமாகும். சமஸ்தாவின் உருவாக்கம் 1922-ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

மேற்கத்திய பாணியில் நடந்துகொண்டிருக்கும் நவீனமயமாக்கல் போக்குகளால் கேரள முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டபோது, 1922 ஆம் ஆண்டு கொச்சி மாநிலத்தின் கொடுங்கல்லூரில் கே.எம்.சீதி சாஹிப், கே.எம்.மௌலவி மற்றும் இ.கே.மௌலவி போன்ற தலைவர்களால் நிறுவப்பட்ட கேரள முஸ்லீம் ஐக்யா சங்கம் (கேரள முஸ்லிம்களிடையே ஒற்றுமைக்கான குழு) மூலம் புதிய சித்தாந்தவாதிகள் முதலில் வெளிவந்தனர். சிதறிய மற்றும் ஒழுங்கமைக்கப்படாத சீர்திருத்த ஆர்வலர்களை ஒன்றிணைக்க முயற்சித்தது. பின்னர், அவர்கள் 1924-ஆம் ஆண்டு அல்வேயில் நடைபெற்ற ஐக்ய சங்கத்தின் இரண்டு நாள் மாநாட்டில் கேரள ஜம்இய்யத் உல்-உலமா என்ற உலமா அமைப்பை உருவாக்கினர்,

இது பொன்னானி மக்தூம்கள் தலைமையிலான சிறந்த அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் வளர்க்கப்பட்டது. அவர்கள் இஸ்லாமிய கலாச்சார மரபுகளை ஷிர்க் மற்றும் பிதா என அறிவித்தனர்,. கேரளாவின் இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் புதிய விளக்கங்களுக்கு எதிராக மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தை உலமாக்கள் உணர்ந்தனர்.

மார்க்கத்தின் உண்மையான உணர்வைப் பாதுகாக்க ஒரு நிறுவன இயக்கத்தின் தேவை பற்றி விவாதிக்க. தகுந்த தீர்வைப் பற்றி விவாதிக்க சிறந்த அறிஞர்களின் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1925-இல், சில முக்கிய உலமாக்கள் மற்றும் பிற சமூகத் தலைவர்கள் காலிக்கட் வலிய ஜும்ஆ மஸ்ஜிதில் ஒன்று கூடி, நீண்ட மற்றும் தீவிர விவாதங்களுக்குப் பிறகு உலமா அமைப்பை உருவாக்கினர். அமைப்பின் தலைவராக கே.பி.முஹம்மது மீரான் முஸ்லியாரும் செயலாளராக பரோல் ஹுசைன் மௌலவியும் நியமிக்கப்பட்டனர். புதிதாக உருவாக்கப்பட்ட உலமா அமைப்பு ஒரு வருடத்திற்குள் பல பிரபலமான மாநாடுகளைக் கூட்டியது,

மாநாட்டிற்கு முன்பு உருவாக்கப்பட்ட தற்காலிக அமைப்பை மறுசீரமைத்து சமஸ்தா கேரளா ஜம்இய்யத் உல்-உலமா என்ற பெயரில் ஒரு முழு அளவிலான அமைப்பு அமைப்பை ஏற்றுக்கொண்டது. சமஸ்தாவின் முதல் தலைவராக வர்க்கல் முல்லக்கோயா தங்ஙளும், துணைத் தலைவர்களாக பாங்கில் அஹமது குட்டி முஸ்லியார், முஹம்மது அப்துல் பாரி முஸ்லியார், கே.எம். அப்துல் காதர் முஸ்லியார், கே.பி. முஹம்மது மீரான் முஸ்லியார் ஆகியோரும், முதல் குழுவில் பி.வி. முஹம்மது முஸ்லியாரும், பி.கே. முஹம்மது முஸ்லியாரும் , இடம்பெற்றனர்.

99வது நிறுவன தின விழா:

இப்படி, பல்வேறு சவால்களை சந்தித்து, அழகிய இஸ்லாமிய ஒளியை கேரள முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே கொண்டு சென்றுச் சேர்க்க சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பு, தொடர்ந்து தனது பணிகளை செய்து வருகிறது. கடந்த 98 ஆண்டுகளாக சிறப்பான சேவை செய்துள்ள சமஸ்தா, கடந்த புதன்கிழமையன்று, 99வது ஆண்டு நிறுவன தின விழாவை கொண்டாடியது.

கோழிக்கோட்டில், நடந்த இந்த 99வது நிறுவன தின விழாவிற்கு இ.யூ.முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பனக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமை தாங்கினார்.

முத்துக்கோயா தங்ஙள் உரை:

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில், சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவர் சையத் முஹம்மது ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மார்க்கம், பெண் கல்விக்கு எதிரான மார்க்கம் இல்லை என குறிப்பிட்டார். அதேநேரத்தில், பெண் கல்வி இஸ்லாத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கல்வி பெறும் பெண்கள்,எந்தவித தொல்லைகளுக்கும் ஆளாகாமல், உரிய பாதுகாப்புடன் நல்ல கல்வி பெற வேண்டும் என்பதே தங்கள் அமைப்பின் நோக்கம் என ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் தெரிவித்தார்.

 

சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பு, பெண் கல்விக்கு எதிரானது என சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்த அவர், இப்படி சிலர் செய்யும் பொய் பிரச்சாரம் போன்று, தங்களுடைய அமைப்பு ஒருபோதும் பெண் கல்விக்கு எதிரானது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

கேரள பெண்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற சிறந்த மற்றும் உயர்ந்த நோக்கத்தில், கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா அமைப்பு, பல்வேறு நல்ல ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து இருப்பதாக, ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் கூறினார்.

பெண்கள் கல்வி பெறும்போது, கண்டிப்பாக சில வரைமுறைகளை பின்பற்ற வேண்டும்., அந்த வழிக்காட்டுதல்களை முறைப்படி பின்பற்றி கல்வி பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய அழகிய வழிக்காட்டுதல் நெறிமுறைகளை தங்களுடைய அமைப்பு உருவாக்கி, பெண் கல்வியை ஊக்குவித்து வருகிறது. எனவே, பெண்கள் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாமல், தகுந்த பாதுகாப்புடன் கல்வி பெற வேண்டும்.

இவ்வாறு, ஜிஃப்ரி முத்துக்கோயா தங்ஙள் தமது உரையின்போது அறிவுறுத்தினார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த இந்த 99வது நிறுவன தின விழாவில் ஆயிரக்கணக்கான உலமா பெருமக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

-            சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, June 26, 2024

உறுதி...!

 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி:



புனித பூமி....!

 புனித மெக்கா - Holy Makkah...!



Tuesday, June 25, 2024

பதில்....!

 ராகுல் யார்?

 என கேள்வி எழுப்பிய மோடிக்கு 

காலம் சொல்லிய பதில் இது.



சமூக ஊடகங்கள் - அதிர்ச்சி தகவல்...!

பெண்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகங்கள்...!

 - ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் -

சமூக ஊடகங்கள் இல்லாமல், வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு, தற்போது மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. சமூக, அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு சமூக ஊடகங்கள் மனித வாழ்க்கையில் ஒன்றிவிட்டன.

சமூக ஊடகங்கள் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் என்பதையும் மறுக்க முடியாது. சமூக ஊடகங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமும் எப்படிப்பட்ட தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வுகள் தரும் முடிவுகள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன. 

சமூக ஊடகங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை "தனது விதிமுறைகள் பற்றிய தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை முன்வைத்துள்ளது. அதில் பல சுவையான, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

பெண்களின் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கம்:

சமூக ஊடகங்கள் பெண்களின் வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பாலின ஸ்டீரியோடைப்களை வலுப்படுத்துகின்றன. அத்துடன் இணைய மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்டு அவர்களின் பாதிப்பை அதிகரிக்கின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பம் கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்தும் அதேவேளையில், இது பயனர்களின் தகவல்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கல்வியில் இருந்து திசைதிருப்பும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், டிஜிட்டல் தளங்கள் எதிர்மறையான பாலின ஸ்டீரியோடைப்களை பரப்புகின்றன என்றும், குறிப்பாக சிறுமிகளின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, அத்தகைய தளத்தை பயன்படுத்துவதில், நெறிமுறை அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் கல்வி மற்றும் தொழில் அடிப்படையில் பெண்களின் அபிலாஷைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தும் கருவியாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம், டிக் டோக்கின் பிரச்சனை:

தற்போது உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம், முகநூல், டிக்டோக் ஆகியவற்றை பெண்கள் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் பரவும் பட உள்ளடக்கம், ஆரோக்கியமற்ற நடத்தைகள், நம்பத்தகாத உடல் இலட்சியங்களை ஏற்றுக்கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று "பெண்கள் விதிமுறைகள் பற்றிய தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் உள்ள அறிக்கை கூறுகிறது.  இது பெண்களின் சுயமரியாதை மற்றும் அவர்களின் உடல் உருவத்தைப் பற்றி அவர்கள் நினைக்கும் விதத்தை பாதிக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

20 வயதிற்குட்பட்ட பெண்களில் 32 சதவீதம் பேர், தங்கள் உடலைப் பற்றி மோசமாக உணரும்போது, இன்ஸ்டாகிராம் அதைப் பற்றிய மோசமான படத்தைக் காட்டுகிறது என்று பேஸ்புக்கின் சொந்த ஆராய்ச்சியை அறிக்கை மேற்கோள் கட்டியுள்ளது. மறுபுறம், Tik Tok-இல் உள்ள குறுகிய மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் பயனர்களின் நேரத்தை வீணடிப்பதோடு அவர்களின் கற்றல் பழக்கத்தையும் பாதிக்கின்றன. எனவே, தொடர்ச்சியான கவனம் தேவைப்படும் கல்வி மற்றும் பாடநெறி இலக்குகளை அடைவது மிகவும் கடினமாகிறது.

சைபர் மிரட்டல்கள்:

ஐ.நா. அறிக்கையின்படி, ஆண்களை விட பெண்கள் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்கின்றனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உள்ள நாடுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தாங்கள் ஒரு கட்டத்தில் இணைய அச்சுறுத்தலை அனுபவித்ததாக தெரிவித்தனர். சிறுவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும்.  ஆன்லைனிலும் வகுப்பறைகளிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செக்ஸ் வீடியோக்களின் பெருக்கம் பிரச்சனையை அதிகப்படுத்தியுள்ளது.

பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் பார்க்க விரும்பாத படங்கள் அல்லது வீடியோக்கள் ஆன்லைனில் வெளிப்பட்டதாகத் தெரிவித்தனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பாய்வின் கண்டுபிடிப்புகள் ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்பட கல்வியில் பாரிய முதலீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த நவம்பரில் டிஜிட்டல் சமூகங்களை நிர்வகிப்பதற்கான யுனெஸ்கோவின் வழிகாட்டுதலின்படி டிஜிட்டல் சமூக தொடர்புகளை மேம்படுத்தி முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்கு  தடை:

சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் எதிர்மறையான பாலின நிலைப்பாடுகள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் கல்விக்கு இடையூறாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்தத் துறைகள் பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்துகின்றன, இதனால் பெண்கள் டிஜிட்டல் ஆதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை இழக்கிறார்கள்.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, உலகளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களில் பெண் பட்டதாரிகளின் சதவீதம் 10 ஆண்டுகளாக 35 சதவீதமாக இருந்தது. ஒரு சமீபத்திய அறிக்கை, நடைமுறையில் உள்ள பாலினச் சார்புகள் பெண்கள் இந்தத் துறைகளில் தொழில் செய்வதைத் தடுக்கின்றன. இதனால் தொழில்நுட்பப் பணியாளர்கள் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். உலகளவில் அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வேலைகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே உள்ளனர். உலகின் முக்கிய பொருளாதாரங்களைப் பார்த்தால், அவற்றின் எண்ணிக்கை தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் 26 சதவீதம், பொறியியலில் 15 சதவீதம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் 12 சதவீதமாகும். அதேபோல், புதிய கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 17 சதவீதம் மட்டுமே பெண்கள். சைபர் குற்றங்கள் பெண்களிடையே, கவலை, உணர்ச்சி மன அழுத்தம் மற்றும் தற்கொலை கூட ஏற்படுத்தும் என்று அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. 

சரியான முறையில் சமூக ஊடகங்கள்:

உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் மாற்றத்தில் ஆண்கள் முக்கிய பங்கு வகிப்பதாக மதிப்பாய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. 68 சதவீத நாடுகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் இருந்தாலும், அவற்றில் பாதி மட்டுமே பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவாக உள்ளன.

இந்த கொள்கைகளில் வெற்றிக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்துவது முக்கியம் என்று யுனெஸ்கோ கூறுகிறது. இதற்காக சமூக ஊடகங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். சமூகங்களின் டிஜிட்டல் மாற்றத்தில் பெண்களின் சம பங்கை உறுதி செய்வதும், உண்மையிலேயே உள்ளடக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் மிகவும் அவசியமாகும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டதால், அதைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை அவசியம் என்பதை நாம் உணர வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் மட்டுமே, சமூக ஊடகங்கள், பெண்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை தடுக்க முடியும்.  இது மட்டுமே தற்போது நம்மிடம் இருக்கும் ஒரே வழியாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

பதவியேற்பு....!

 ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்பு...!

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதி...!!





Monday, June 24, 2024

63 வயதில் கல்வியில் சாதனை....!

 "கல்வியில் ஆர்வம் கொண்டு 63 வயதில் பட்டம் பெற்று சாதனை புரிந்த சவூதி பெண்"  

இஸ்லாமிய மார்க்கம், கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும். ஆண், பெண் இருவரும் நல்ல கல்வி பெற வேண்டும் என அறிவுறுத்தும் அழகிய மார்க்கமாகும். கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும். நாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

இப்படி, இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால், பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததேயாகும். 

இஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாம் என்று  தடை போடவில்லை. கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது. எனவே பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை. அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறது. 

கல்வியில் ஆர்வம் செலுத்தும் பெண்கள்:

பெண் கல்விக்கு இஸ்லாமிய மார்க்கம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதை தற்போதைய இளம் சமுதாயம் அறிந்து, அதன்மூலம் தெளிவுப்பெற்று வருகிறார்கள். மேலும், கல்வியில் ஆர்வம் செலுத்தி, சாதித்தும் வருகிறார்கள். சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைப் போன்று, தாங்களும் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இஸ்லாமிய பெண்கள் மத்தியில் தற்போது இருந்து வருகிறது. அதன் காரணமாக, உயர்கல்வியில் அவர்கள் ஆர்வம் செலுத்தி, அறிவியல், பொருளாதரம் உள்ளிட்ட துறைகளில் சாதித்து வருகிறார்கள். விஞ்ஞானிகளாக உயர்கிறார்கள். அதன்மூலம், நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள். 

ஒருசில பெண்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களுடைய கல்வியை இடையிலேயே கைவிடும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாக அவர்களின் உள்ளத்தில் ஒருவித சோகம் ஏற்படுகிறது. எனினும், நிலைமையை புரிந்துகொண்டு, தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அவர்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள். நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பம், கனவு நிறைவேறாமல் போனதை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இப்படி ஒருபோதும் வேதனைப்படவே கூடாது என சவூதி ஆரேபியாவைச் சேர்ந்த 63 வயதான இஸ்லாமிய பெண் ஒருவர், தனது அழகிய செய்கையின் மூலம் மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார். 

சவூதி பெண் உம் அப்துல்லா:

சவூதி அரேபியாயைச் சேர்ந்த 63 வயதான உம் அப்துல்லா என்ற பெண்ணுக்கு, 17 வயதில் திருமணம் நடைபெற்றது. எனவே, அவர் தன்னுடைய கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். திருமணம் முடிந்தபிறகு, அவருக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைக்க, உம் அப்துல்லா, ஒரு தாயாக மிகச் சிறந்த முறையில், தன்னுடைய கடமைகளை நிறைவேற்றினார். 

ஒரு மனைவியாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத் தலைவியாக, உம் அப்துல்லா தன்னுடைய கடமைகளை நிறைவாக செய்து வந்தபோதிலும், அவருடைய உள்ளத்தில் கல்வி மீது அதிக ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. திருமணத்திற்காக கைவிட்ட, கல்வியை மீண்டும் கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்தில் நாள்தோறும் எழுந்துகொண்டே இருந்தது. இந்த எண்ணம் ஒரு கல்வி ஆசையாக, தாகமாக மாறியது. எனவே, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது உள்ளிட்ட பணிகளை, கடமைகளை நிறைவாக செய்த உம் அப்துல்லா, 42 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிறுத்திய கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என முடிவு செய்தார். 

தம்முடைய 63வது வயதில், கல்வி பெற வேண்டுமா என அவர் ஒருபோதும் தாழ்வாக நினைக்கவில்லை. 11 குழந்தைகளை வளர்ப்பதற்காக 42 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிறுத்திய கல்வியை பெற விரும்பிய அவர், பின்னர் ஹெயில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, தேர்ச்சிப் பெற்று பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 

63 வயதில் கல்வியில் சாதனை:

17 வயதில் திருமணமான உம் அப்துல்லா, ஆரம்பத்தில் மெட்ரிகுலேஷன் வரை படித்தார். பின்னர் 59 வயதில் அவர் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, ஹெயில் பல்கலைக்கழகத்தில், சேர்ந்து அங்கு நான்கு ஆண்டுகள் கல்வி பயின்று, பட்டம் பெற்றுள்ளார். 

தம்முடைய கல்வி உந்துலைப் பற்றி கருத்து கூறியுள்ள உம் அப்துல்லா, தாம், அல்லாஹ்வை ஒரு அறிவாளி பெண்ணாக சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.  மீண்டும் படிக்க ஆரம்பித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அந்த 63 வயதான பெண், "சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வை தாம் சந்திக்கும் போது, ​​தாம் அறியாத பெண்ணாகச் சந்திக்க விருப்பம் இல்லை என்றும், அல்லாஹ்வின் பார்வையில் அறிவுடையவர்களில் ஒருவராக எண்ணப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும்" கூறியுள்ளார். 

உம் அப்துல்லாவின் இந்த அழகிய கல்வி கதை, விடாமுயற்சி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை எடுத்துக்காட்டுகிறது, கல்வியைத் தொடர இது ஒருபோதும் தயங்கக் கூடாது. கல்வியை பெற தாமதம் இல்லை என்பதைக் காட்டுகிறது. உம் அப்துல்லாவின் ஒரு கல்விப் பயணம், வயது அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.

முஸ்லிம் பெண்களின் கவனத்திற்கு:

63 வயதில் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ள சவூதி அரேபிய பெண், உம் அப்துல்லா, அந்நாட்டு பெண்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அழகிய முறையில், பாடம் எடுத்துக் கூறியுள்ளார். இஸ்லாம் பெண்களுக்கு கல்வி பெற தடை விதிக்கவில்லை என்பதையும், திருமணம் முடிந்துவிட்டதால், கல்வியை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதையும், அவர் மற்ற பெண்களுக்கு தனது செயல் மூலம் போதித்துள்ளார். 

எனவே, இந்திய முஸ்லிம் பெண்கள், கல்வியில் தங்களது கவனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். ஒரு பெண் கல்வி பெற்றால், அந்த குடும்பமே, நல்ல அறிவுள்ள குடும்பமாக இருக்கும் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, கல்வியை பெற்றுவிட வேண்டும். கல்வி பெற வயது ஒரு தடையே இல்லை என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். சவூதி அரேபிய பெண், உம் அப்துல்லாவின் கல்வி சாதனையை நினைத்து, இஸ்லாமிய உலகம் பெருமைப்பட வேண்டும். கடைசியாக, வாழ்க்கையில் தேடிக்கொண்டே இருங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்க்கை உங்களை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஆர்ப்பாட்டம்....!

 அரசமைப்புச் சட்டம் காப்போம்....!

எதிர்க்கட்சித் தலைவர்கள் முழக்கம்...!

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்...!



Sunday, June 23, 2024

இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி....!

இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி 25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயல்படுவார்...!

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு:

சென்னை, ஜுன்.24-கடந்த 5 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றிய இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, இனி, 25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டு, நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 அண்மையில் நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற கே.நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னையில் 23.06.24 ஞாயிற்றுக்கிழமையன்று, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, 18வது மக்களவைத் தேர்வு செய்யப்பட்ட நவாஸ் கனிக்கு தங்களது வாழ்த்துகளை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனிக்கு சால்வை அணிவித்து, தனது வாழ்த்துகளை கூறி, அவருடைய பணிகள் சிறப்பாக அமைய துஆ செய்தார். 

நவாஸ் கனிக்கு பாராட்டு:

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் கே.எம்.கே., இராமநாதபுரம் தொகுதியின் எம்.பி.யாக இருந்து கடந்த 5 ஆண்டுகளில் நவாஸ் கனி செய்த பணிகள் ஏராளம். இந்த பணிகள் மூலம் மக்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் நவாஸ் கனி என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், நவாஸ் கனி செய்த, செய்யும் அனைத்துப் பணிகளுக்கும் அவரது குடும்பத்தினர் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள். அதன் காரணமாக, மேலும் சிறப்பான முறையில் செயல்பட நவாஸ் கனிக்கு உற்சாகம் பிறக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும், நவாஸ் கனி செய்த பணிகள் காரணமாக, அந்த பணிகள், சேவைகள் சமுதாய மக்களால் ஏற்றக் கொள்ளப்பட்டு, அதன்மூலம் அவர்கள் கவரப்பட்டு, நவாஸ் கனியின் பணிகள் மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆவலுடன் இங்கு அனைவரும் துஆ செய்ய வந்துள்ளார்கள். 

சூழ்ச்சிகளை வீழ்த்தி வெற்றி:

இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி, கடந்த 17வது மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட, இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். திமுக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் பெரும் முயற்சிகள் செய்திருக்கும் திமுக தோகளுக்கும் கூட்டணிக் கட்சி சகோதர சகோதரிகளுக்கும் இச்சமயத்தில் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். 

இந்த தேர்தலில் நவாஸ் கனி,  மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை துணிச்சலுடன் சந்தித்து, அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் நவாஸ் கனிக்கு எதிராக மிகப்பெரிய சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மோடியின் நண்பர் என முன்னாள் முதலமைச்சர் அறிமுகம் செய்யப்பட்டார். அப்படி பல்வேறு சவால்கள், நெருக்கடிகள், சூழ்ச்சிகள் மத்தியிலும், நவாஸ் கனி, ஏக இறைவனின் கருணையால் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார். நவாஸ் கனி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என துஆ செய்த அனைவருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நவாஸ் கனி செய்த பணிகள், கடமைகள் ஆகியவற்றால் கவரப்பட்ட அனைவரும் அவரது வெற்றிக்காக துஆ செய்தார்கள். அப்படி துஆ செய்த அருமையான மக்கள் கூட்டம் தான் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறது. 

மார்க்க ரீதியாக ஒன்றுப்பட்ட இந்திய முஸ்லிம்கள்:

கடந்த 17வது மக்களவையில் இருந்த சூழல் தற்போது இருக்காது. 18வது மக்களவையில் வலிமையான எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மூன்று பேரும் கடந்த 17வது மக்களவையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், சகோதர சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்தார்கள். தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கடுமையாக உழைத்தார்கள். மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போது, பா.ஜ.க. வலிமையான கட்சியாக இல்லை. தங்களுடைய விருப்பப்படி அவர்கள் இனி இயங்க முடியாது. எனவே, இ.யூ.முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் இனி மேலும் சிறப்பாக அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

உலகில் தற்போது 193 நாடுகள் உள்ளன. இந்த 193 நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். 193 நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அரபு நாட்டில் வாழும் முஸ்லிம், அரபு முஸ்லிமாக கருதப்படுகிறார். கென்யாவில் வாழும் முஸ்லிம் கென்ய முஸ்லிமாக கருதப்பட்டு வருகிறார். ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை. காரணம், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஒரு இனத்தை மட்டும் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை. இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 698 பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என ஆய்வுகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஆயிரத்து 698 பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். மீனவர் இனம் என அனைத்து பிரிவுகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். 4 ஆயிரத்து 698 பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் மார்க்க ரீதியாக ஒன்றுப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் மற்ற நாட்டு முஸ்லிம்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் உள்ள வித்தியாசம், வேறுபாடு ஆகும். இந்திய முஸ்லிம்கள் இன ரீதியாக ஒன்றுப்படவில்லை. ஆனால் மார்க்க ரீதியாக ஒன்றுப்பட்டு இருக்கிறார்கள். 

25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதி: 

இப்படி மார்க்க ரீதியாக ஒன்றுபட்டுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு, இ.யூ.முஸ்லிம் லீக் பணியாற்றி வருகிறது. அவர்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்காக மட்டுமே இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் குரல் கொடுப்பது இல்லை. மாறாக, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைக்குக்கு தீர்வு கண்டு வருகிறார்கள். 

இப்படி, சிறப்பாக பணியாற்றும் வரிசையில் இராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி இருந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த சேவை, இனி மேலும் விரிவு அடையும். இந்தியாவில் வாழும் 4 ஆயிரத்து 698 பிரிவுகளில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்விற்காகவும், நவாஸ் கனி இனி குரல் கொடுப்பார். நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் பிரதிநிதியாக அவர் இனி செயல்படுவார். 25 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஒருவர் செயல்படுவார் என்பதை நினைக்கும்போது, உண்மையில் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. அவரது சேவை மிகச் சிறப்பாக அமைய துஆ செய்ய ஆவல் ஏற்பட்டு, அந்த ஆவலில் ஏக இறைவனிடம் மனம் உருகி துஆ செய்கிறோம். 

நவாஸ் கனி, இனி செல்லும் இடம் எல்லாம் வெல்ல வேண்டும். அவர் செல்லும் இடம், வெல்லும் இடமாக மாற  வேண்டும். 25 கோடி இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயல்படும் நவாஸ் கனிக்கு ஏக இறைவன், அனைத்து வளங்களையும் வாரி வழங்க வேண்டும். அதற்காக நாம் துஆ செய்கிறோம். இங்கு கூடி இருக்கும் சமுதாய மக்கள் அனைவரும் துஆ செய்கிறோம். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், மலேசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர், சென்னையைச் சேர்ந்த நவாஸ் கனி உறவுத் தொழில் அதிபர், நவாஸ் கனியின் சகோதரர்கள் சீராஜ் கனி, அன்சாரி கனி  மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி கனி நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்